Last Updated : 15 Jun, 2021 02:08 PM

 

Published : 15 Jun 2021 02:08 PM
Last Updated : 15 Jun 2021 02:08 PM

கடன் தொல்லை: செல்போனில் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பிரியாணிக் கடை உரிமையாளர்

மதுரையில் கடன் நெருக்கடியால் செல்போனில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பிரியாணிக் கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, காவல்துறை தரப்பில் கூறியதாவது:

மதுரை மகப்பூபாளையம் அன்சாரி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி (37). இவர், அப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பிரியாணிக் கடை நடத்திவந்தார். இவரது மனைவி பாத்திமா (28). இவர்களுக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தொழில் விரிவாக்கத்திற்காக முகமது அலி சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதற்கான வட்டியைச் செலுத்தி வந்த நிலையில், கரோனா ஊரடங்கால் கடனுக்குரிய வட்டியைச் செலுத்த முடியாமல் தவித்துவந்துள்ளார். இருப்பினும், கடன் கொடுத்தவர்கள் அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்.

இந்நிலையில், கடன் தொல்லையால் விரக்தி அடைந்த அவர், தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவில் (ஜூன் 14) அவரது வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீஸார் அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவரே தனது செல்போனில் மதுரை காவல் ஆணையருக்குப் பேசிய ஆடியோ குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில், "தொழிலுக்காக பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் மூலம் வழக்கறிஞர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். வாங்கிய கடனுக்கு மேல் வட்டி செலுத்திய நிலையில், தொடர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்துக் கடையை மூடிவிடுவேன் என மிரட்டினார்.

கடனைத் தரமுடியவில்லையெனில் ஊரைவிட்டுப் போகும்படி வற்புறுத்துகின்றனர். வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார். மேலும், எனக்கு சிபாரிசு செய்த பெண்ணுக்கும் கடன் கொடுத்தவர் தொடர்ந்து தொந்தரவு தந்தார். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறேன்.

தற்கொலைக்குத் தூண்டிய வழக்கறிஞர் உட்பட 4 பேர் மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மனைவி, குழந்தைகள், எனக்கு உதவிய நண்பர்கள் சக்தி, சரவணனுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" போன்ற தகவல்களை கண்ணீருடன் பதிவிட்டு இருப்பது தெரியவந்தது.

எஸ்.எஸ்.காலனி போலீஸார் இந்த ஆடியோ பதிவைக் கைப்பற்றினர். ஆடியோவில் அவர் குறிப்பிட்டுள்ள சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x