

வேலூர் மாவட்டம் பொன்னை கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள பொன்னை பஜார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). இவர் சந்திரசேகர் என்ற நண்பருடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதே பகுதியில் ரவி என்பவருக்குச் சொந்தமான 0.35 சென்ட் இடத்தை வாங்கியுள்ளனர்.
இந்த மனையை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கக் கோரி பொன்னை கிராம நிர்வாக அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலனை செய்த கிராம நிர்வாக நிர்வாக அலுவலர் கவிதா (32), பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க விரும்பாத வெங்கடேசன், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வெங்கடேசனிடம் லஞ்சப் பணம் ரூ.10 ஆயிரம் தொகையில் ரசாயனம் தடவி கொடுத் தனுப்பினர்.
இந்தத் தொகையை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கவிதா இன்று (ஜூன் 3) பெற்றுக்கொண்டார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் விஜயலட்சுமி, விஜய் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் கவிதாவை கைது செய்தனர்.
.