Last Updated : 01 Jun, 2021 03:24 PM

 

Published : 01 Jun 2021 03:24 PM
Last Updated : 01 Jun 2021 03:24 PM

தூத்துக்குடியில் வீட்டு மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து இளம்பெண் பலி

தூத்துக்குடியில் வீட்டு மேற்கூரையின் சிமென்ட் பூச்சு நள்ளிரவில் திடீரென பெயர்ந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொறியியல் பட்டதாரி இளம்பெண் உயிரிழந்தார். அவரது சகோதரர் பலத்த காயமடைந்தார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7-வது தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்ட் வீட்டில் ராஜமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

தச்சு வேலை செய்து வரும் ராஜமுருகனுக்கு மனைவி மற்றும் பரமேஸ்வரி (22) என்ற மகளும், சுந்தர் (21) என்ற மகனும் உள்ளனர். இதில் பரமேஸ்வரி பொறியியல் படித்துவிட்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுந்தர் கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார்.

ராஜமுருகன் குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்துள்ளது. அதை வீட்டின் உரிமையாளரான நடராஜன் கொத்தனார் மூலம் சிமெண்ட் வைத்து பூசி சரி செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் மேற்கூரையில் புதிதாக பூசப்பட்ட சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரி மற்றும் சுந்தர் ஆகியோர் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பரமேஸ்வரி உயிரிழந்தார். படுகாயமடைந்த சுந்தர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பாரவையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது டிஎஸ்பி கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தச்சு தொழிலாளியான ராஜமுருகன் தனது கஷ்டமான சூழ்நிலையிலும் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என நினைத்து படிக்க வைத்துள்ளார். மகள் படித்து முடித்துவிட்டு கடந்த 6 மாதமாக வேலைக்கு சென்றுள்ளார்.

இனிமேல் தனது கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என நம்பியிருந்த நேரத்தில் பேரடியாக இந்த விபத்து நடந்துள்ளது. மகளை பறிகொடுத்துவிட்டு ராஜமுருகன் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x