Last Updated : 30 May, 2021 04:42 PM

 

Published : 30 May 2021 04:42 PM
Last Updated : 30 May 2021 04:42 PM

கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த 8 பேர் கைது; ரயில்வே காவல் துறையினர் நடவடிக்கை

கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த 6 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்களைக் கடத்தி வந்து விற்பதாகவும், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாகவும் காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. அதன்பேரில், மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் துறையினர், சட்டம்-ஒழுங்கு காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினர் 5-வது நடைமேடையில் இன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாகச் செல்லும் லால்பாக் விரைவு ரயில், சங்கமித்ரா விரைவு ரயில், காக்கிநாடா மற்றும் காவேரி விரைவு ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

இதில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (23), ராஜ்கபூர் (24), கார்த்திக் (23), செல்வமணி (60), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (35), ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (33) ஆகிய 6 பேரும் கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை வாங்கி வந்து திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 90 லிட்டர் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல, ரயில்வே காவல் துறையினர் 3-வது நடைமேடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திருப்பத்தூர் அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியைச் சேர்ந்த பாபு (28) ஆகிய 2 பேரும் கர்நாடகா மாநில மது பாட்டில்களை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்த ரயில்வே காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 708 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x