Published : 22 May 2021 08:37 PM
Last Updated : 22 May 2021 08:37 PM

ரெம்டெசிவிரைக் கள்ளச் சந்தையில் விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை

ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''பொதுமக்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவோ, சமூக வலைதளத் தகவல்களின் மூலமாகவோ போலித் தகவல்களின் பேரில் வாங்க முயல வேண்டாம். இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுவரை சென்னை பெருநகரில் தாம்பரம், ஐசிஎஃப், பல்லாவரம், வேப்பேரி, பள்ளிக்கரணை, கிண்டி, ரெட்ஹில்ஸ், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் தலைமைச் செயலக காலனி காவல்நிலையச் சரகங்களில் காவல்துறையினரின் நடவடிக்கையின் மூலம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரெம்டெசிவிர் மருந்தைப் போலியான ஆவணங்கள் கொடுத்து வாங்கிப் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த 34 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 123 ரெம்டெசிவிர் மருந்துகள், 6 பங்களாதேஷ் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் 140 நினவீர் மருந்துகள் உட்பட 269 மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், மயிலாப்பூர் துணை ஆணையாளர் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், 14.05.2021 அன்று மதுரவாயல் நாகாத்தம்மன் தெருவில் இயங்கி வரும் Medistar Health Care Ltd என்ற மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் புவனேஷ்வர் (36) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர் ரெம்டெசிவிர் மருந்தைக் கொண்டிதோப்பு, ஆயலூர் முத்தையா தெருவில் இயங்கி வரும் Navkar Distributors என்ற மருந்து விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் நிஷித் பண்டாரி, (32) என்பவரிடம் இருந்து எந்த விதமான ஆவணமும் இன்றி, தான் வாங்கி வந்து அரசாங்க அனுமதியின்றி விற்பனை செய்வதாகத் தெரிவித்ததன் பேரில், காவல் குழுவினர் கொண்டிதோப்பு சென்று Navkar Distributors நிறுவனத்தைச் சோதனை செய்து, அங்கிருந்த145 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளைப் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு முதல்வர், கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்குவோர் மீதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதன்பேரில், கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி வைத்த குற்றவாளிகள் புவனேஷ்வர் மற்றும் நிஷித் பண்டாரி ஆகியோரைக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய E-1 மயிலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. நேற்று (21.5.2021) உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் Remdesiver, Tocilizuma-b, Amphotericin மருந்துகள் மற்றும் Oxygen Concentrator இயந்திரங்களைத் தருவதாக இணையதளத்தில் வரும் அழைப்புகள் மற்றும் விளம்பரத்தைக் கண்டு V-6 கொளத்தூர் நிலைய எல்லையில் ஜெயச்சந்திரன் என்பவர் ரூ.40,800 பணமும், S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் ஶ்ரீகணேஷ் என்பவர் ரூ.1,23,000, ரேகா என்பவர் ரூ.73,000 செலுத்தியும், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லையில் ஒரு மருத்துவர் ரூ.1,67,000 மற்றும் மற்றொரு மருத்துவர் ரூ.14,000 ஆகியவற்றை இணையதளத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்ததாகப் புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இணையதளத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பதாகக் கூறி அதிக விலைக்கு விற்ற 1.ஆதித்யன் (24), கே.கே.நகர், 2.ராஜ்குமார் (27), பட்டாளம், 3.சையது ரஞ்சித் (38), சாஸ்திரிநகர் ஆகியோரை J-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 15.5.2021 அன்று கைது செய்து, ரெம்டெசிவிர் 2 குப்பிகள் மற்றும் பணம் ரூ.89,000 பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது''.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x