Last Updated : 11 May, 2021 02:25 PM

 

Published : 11 May 2021 02:25 PM
Last Updated : 11 May 2021 02:25 PM

உசிலம்பட்டியில் நகைப்பட்டறை தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை: கடன் நெருக்கடியால் சோகம்

மதுரை

கரோனா ஊரடங்கு நேரத்தில் கடன் நெருக்கடியால் மகன், மகள்களைக் கொன்று நகைப்பட்டறை உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை ஆர்.கே.தேவர் தெருவில் வசித்தவர் அய்யாவு. உசிலம்பட்டி பஜார் தெருவில் நகைப்பட்டறை நடத்தினார்.

இவர் சில ஆண்டுக்கு முன்பு இறந்த நிலையில், அவரது மகன் சரவணன் (35) அக்கடையை தொடர்ந்து நடத்தினார். இவரது மனைவி விஜி (எ) பூங்கோதை (24). மகள்கள் மாகலெட்சுமி (10), அபிராமி (6), மகன் அமுதன்(5).

தொழிலை விரிவுபடுத்துவதற்கென சரவணன் சிலரிடம் சிறுக, சிறுக கடன் வாங்கினார். தொழிலில் நஷ்டதால் வாங்கிய கடனுக்கு முறையாக வட்டி செலுத்த முடியாமல் தவித்துள்ளார். கடந்தாண்டு கரோனா பொது ஊரடங்கின்போது கடன் சுமை அதிகரித்து மேலும், சிரம்மத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதும் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அவரது தொழில் முடங்கியது. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமலும், குடும்பத்தை நடத்துவதிலும் சிரமப்பட்டதாகத் தெரிகிறது.

கடன் கொடுத்தவர்கள் அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி தந்துள்ளனர். மனமுடைந்த சரவணன் குடும்பத்தினருடன் தற்கொலை செய்வதை தவிர,வேறு வழியில்லை என, முடிவெடுத்து இருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை சரவணனின் மூத்த மகள் அருகிலுள்ள கடையில் வழக்கம்போல் பால் வாங்கிச் சென்றுள்ளார். இதன்பின், 11 மணி வரை அவரது வீடு திறக்காமல் இருந்துள்ளது.

சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, சரவணன் குடும்பத்தினருடன் இறந்து கிடந்தது கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

இருமகள்கள், மகனுக்கு விஷத்தை (நகைக்கு பாலீஸ் போடும் கெமிக்கல்) கொடுத்து கொன்றுவிட்டு, பிறகு கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம். கடன் தொல்லையே இதற்கு காரணமாக இருக்கலாம் என, போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், சரவணன் எழுதிய கடிதம் ஒன்று அவரது வீட்டில் சிக்கியுள்ளது. அதை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அக்கடிதத்தில், ‘‘ எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. கடன் நெருக்கடியே காரணம். நகைப் பட்டறைக்காக என்னிடம் ரூ.30 லட்சம் கேட்டு தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதிலும், மன உளைச்சலுக்கு ஆளாகினேன்,’’ போன்ற சில தகவல்களை அவர் குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஊரடங்கால் தொடர்ந்து தொழில் புரிய முடியாத நிலை, கடன் நெருக்கடியால் குடும்பமே தற்கொலை செய்த சம்பவ உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x