Last Updated : 04 May, 2021 07:34 PM

 

Published : 04 May 2021 07:34 PM
Last Updated : 04 May 2021 07:34 PM

யோகா ஆசிரியரைக் கொன்று குளியலறைக்குள் புதைத்த மதுரை வழக்கறிஞர்: 20 நாட்களுக்குப் பிறகு தூக்கிட்டுத் தற்கொலை 

தோழியான யோகா ஆசிரியரைக் கொன்று குளியலறைக்குள் புதைத்த வழக்கறிஞர், 20 நாட்களுக்குப் பிறகு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (46). வழக்கறிஞரான இவர், சிலம்பம் கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருந்தார். வழக்கறிஞர் தொழிலுடன் வீட்டில் சிறுவர், சிறுமியர்களுக்குச் சிலம்பப் பயிற்சியும் அளித்தார். இவரது மனைவி விஜயலட்சுமி மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஹரிபிரியா (11) என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவர், மகளை விட்டுப் பிரிந்து, முனிச்சாலையிலுள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கினார்.

இதற்கிடையில், சிலம்பம் பயிற்சியுடன் சிறுவர்களுக்கு யோகா வகுப்பு நடத்தத் திட்டமிட்ட ஹரிகிருஷ்ணன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சித்ராதேவி (35) என்ற யோகா ஆசிரியரை நியமித்தார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வசித்தனர். மே 1ஆம் தேதி முதல் சித்ராதேவி திடீரென மாயமானார். இதுகுறித்துத் தகவல் அறிந்த அவரது தந்தை கண்ணையா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண் மாயம் என, வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடினர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவரம் போலீஸாருக்குத் தெரிந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸா் உடலை மீட்டு விசாரித்தனர். அவரது வீட்டை ஆய்வு செய்தபோது, கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், ‘‘எனது முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், குழந்தைக்காக சித்ராதேவியுடன் சேர்ந்து வாழ்ந்தேன். ஆனாலும், அவர் எனது மகள் பிரியாவைச் சரியாகக் கவனிக்கவில்லை. ஆத்திரத்தில் 20 நாட்களுக்கு முன்பு அவரைக் கொலை செய்து, வீட்டுக்குள் குளியலறைக்குக் கீழ் புதைத்து, அதன்மேல் டைல்ஸ் கற்களைப் போட்டு மூடிவிட்டேன்’’ போன்ற அதிர்ச்சித் தகவல்களைக் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக வீட்டில் இருந்த அவரது மகளிடம் போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும், குளியலறையைத் தோண்டி ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையையும் எடுத்து வருகின்றனர். பெண்ணைக் கொன்று வீட்டுக்குள் புதைத்து, 20 நாட்கள் வரை சடலத்துடன் தந்தை, மகள் வசித்ததாகக் கூறப்படும் சம்பவம், திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x