Last Updated : 27 Apr, 2021 05:31 PM

 

Published : 27 Apr 2021 05:31 PM
Last Updated : 27 Apr 2021 05:31 PM

விருதுநகர் அருகே தாய், மகள், பேத்தி விஷம் குடித்து உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஒரே குடும்பத்தில் தாய், மகள், பேத்தி ஆகியோர் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி முனியம்மாள் (45). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு முத்துமணி (21), மதன்குமார் (17) என்ற மகன்களும் ஜெயலலிதா (16) என்ற மகளும் உண்டு. முத்துசாமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். முனியம்மாள் தனது மகன், மகள்களுடன் பெட்டிக்கடைக்கு அருகே உள்ள ஒரு வீட்டிலும், அவரது தாய் அடைக்கலம் (70) அருகே உள்ள மற்றொரு வீட்டிலும் வசித்து வந்தனர்.

முனியம்மாளின் இரு மகன்களும் கூலிவேலை செய்து வருகின்றனர். மகள் முஷ்டக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிழவனேரியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு ஜெயலலிதாவை திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முனியம்மாள் எப்பொழுதும் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மகன்கள் இருவரும் சித்தப்பா ஜெயபாண்டி வீட்டில் நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளனர். வழக்கம்போல் அக்கம்பக்கத்தினர் முனியம்மாள் கடைக்கு இன்று காலை பொருட்களை வாங்க செல்லும்போது கடை திறக்கப்படவில்லை.

வீட்டின் கதவைத் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது முனியம்மாளும் அவரது மகள் ஜெயலலிதாவும் இறந்து கிடந்துள்ளதைப் பார்த்து அப்பகுதியில் உள்ளோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவருடைய தாயார் அடைக்கலம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மூதாட்டி அடைக்கலமும் இறந்து கிடந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனியம்மாள் வீட்டின் உள்ளே சென்று முனியம்மாள், ஜெயலலிதா சடலங்களை மீட்டனர். அப்போது அவர்களுக்கு அருகே குளிர்பான பாட்டில் மற்றும் பூச்சி மருந்து பாட்டில்கள் கிடந்தன. விசாரணையில் முனியம்மாள் உள்ளிட்ட 3 பேரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மேலும், போலீஸ் விசாரணையில் முனியம்மாளுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், இதுதொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் கணவர் வீட்டிலிருந்து தாய் வீட்டுக்கு ஜெயலலிதா வந்துள்ளார். அதனால், வரதட்சினை கொடுமை காரணமாக மூவரும் தற்கொலை செய்துகொண்டார்களா என்ற கோணத்திலும் ஆவியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x