Last Updated : 25 Apr, 2021 08:00 PM

 

Published : 25 Apr 2021 08:00 PM
Last Updated : 25 Apr 2021 08:00 PM

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள், பீடி இலை, வெங்காய விதைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலை, வெங்காய விதை ஆகியவற்றை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேலாயுதம் ஆகியோர் தலைமையில் கியூ பிரிவு போலீஸார் நேற்று இரவு தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் 2 சரக்கு வாகனங்களில் இருந்து சிலர் மூட்டைகளை ஒரு படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீஸார் விரந்ததும், அங்கிருந்தவர்கள் கடலில் குதித்து தப்பியோடிவிட்டனர். அங்கு நின்ற மினி லாரி, சுமை ஆட்டோ மற்றும் படகில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவைகளில் சுமார் 2500 கிலோ எடை கொண்ட மஞ்சள் 80 மூட்டைகளிலும், சுமார் 1500 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் 50 மூட்டைகளிலும், சுமார் 150 கிலோ எடை கொண்ட வெங்காய விதைகள் 5 மூட்டைகளிலும் இருந்தன. இவைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

இவைகள் அனைத்தையும், 2 சரக்கு வாகனங்களையும், படகையும் மற்றும் அங்கு நின்ற இரு மோட்டார் சைக்கிள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்த பொருட்களை கடத்தி வந்தது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x