Last Updated : 19 Apr, 2021 05:43 PM

 

Published : 19 Apr 2021 05:43 PM
Last Updated : 19 Apr 2021 05:43 PM

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக்கடைக்காரர் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக்கடைக்காரர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறையை சேர்ந்தவர் என்.ஆனந்தன் (44). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இன்று தனது மனைவி ராமலெட்சுமி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்கு வந்தார்.

ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே வந்த போது ஆனந்தன் திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றார்.

இதனைக் கண்டதும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் ஓடி வந்து அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆனந்தன் கண்ணீர் மல்க கூறியதாவது: நான் கீழத்தட்டப்பாறையில் மளிகை கடை நடத்தி வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி கடன் மூலம் ஒரு லாரியை வாங்கி தொழில் செய்து வந்தேன். ஆனால், லாரி சரியாக ஓடாததால் அதனை மாப்பிளையூரணியை சேர்ந்த நியாயவிலைக் கடைஊழியர் சுப்பிரமணியன் என்பவரிடம் கொடுத்துவிட்டேன்.

ரூ.45 ஆயிரம் பணத்தை மட்டும் சுப்பிரமணியனிடம் இருந்து வாங்கினேன். வங்கிக் கடனுக்கான மாதத்தவணையை அவர் செலுத்திவிடுவதாக கூறினார். மேலும், லாரியின் உரிமத்தை 2 மாதத்தில் தனது பெயருக்கு மாற்றிக் கொள்வதாகவும் கூறியிருந்தார். ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் லாரியின் உரிமத்தை மாற்றவில்லை. அது எனது பெயரிலேயே இருக்கிறது. மேலும், வங்கிக் கடனுக்கான தவணை எதையும் அவர் செலுத்தவில்லை. இதனால் வங்கியில் இருந்து எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

இது தொடர்பாக சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் என்னை மிரட்டுகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தனியார் வங்கி சார்பில் எனது வீட்டை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தால் அனுமதி மறுக்கின்றனர். 2 பெண் குழந்தைகளை வைத்து கொண்டு நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே, சாவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்பதால் தான் தீக்குளிக்க முயன்றேன் என்றார் அவர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ஆனந்தனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x