Last Updated : 19 Feb, 2021 04:25 PM

 

Published : 19 Feb 2021 04:25 PM
Last Updated : 19 Feb 2021 04:25 PM

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.78.18 லட்சம் மோசடி: விருதுநகரில் அரசுப் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.78.18 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமலிங்கா நகரைச் சேர்ந்தவர் சங்கலிங்கம். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகன் ஞானசேகர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வெம்பக்கோட்யைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரது மகன் தீபன்பாரதி, காரியாபட்டி அருகே உள்ள செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி, இவரது கணவரும் விருதுநகர் வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலருமான சந்திரன் ஆகியோர் பத்மாவதியை சந்தித்துள்ளனர்.

அப்போது, திபான்பாரதி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சிக்கு செல்ல உள்ளதாகவும், அவரது உறவினர்கள் உயர்ந்த பதவிகளில் இருப்பதாகவும் பத்மாவதியிடம் கூறி நம்ப வைத்துள்ளனர்.

மேலும், எம்.பி.ஏ. பட்டதாரியான ஞானசேகரனுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.50 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றும், வேலைக்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதைநம்பி, தீபன்பாரதி, ஆசிரியை சுப்புலட்சுமி, அவரது கணவர் சந்திரன் ஆகியோர் வங்கிக் கணக்கில் கடந்த 1.7.2018 முதல் 17.2.2019 வரை பல்வேறு தவணைகளில் ரூ.78.18 லட்சத்தை பத்மாவதி செலுத்தியுள்ளார்.

ஆனால், ஞானசேகரனுக்கு வேலைவாங்கிக் கொடுக்காமல் ஆசிரியை உள்ளிட்ட 3 பேரும் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவில் பத்மாவதி புகார் அளித்தார். அதையடுத்து, ஆசிரியை சுப்புலட்சுமி உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x