Last Updated : 10 Feb, 2021 06:51 PM

 

Published : 10 Feb 2021 06:51 PM
Last Updated : 10 Feb 2021 06:51 PM

குடும்ப தகராறில் தம்பதி காதில் விஷம் ஊற்றி கொண்டு தற்கொலை: விஷம் கொடுக்கப்பட்டு உயிர் தப்பிய குழந்தைகளுக்கு சிகிச்சை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விஷம் கொடுக்கப்பட்டு உயிர் தப்பிய குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் புங்கவாடி கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் வேல்முருகன் (37). இவரது மனைவி சத்யா (33). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருந்தனர். வேல்முருகனின் தாயார் தனலட்சுமிக்கும், சத்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. வழக்கம் போல நேற்று (பிப். 9) மாமியார் - மருமகளுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு ஆதரவாக வேல்முருகன் தனது தாய் தனலட்சுமியை தட்டி கேட்டுள்ளார். அவரையும் தனலட்சுமி தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனால், வேல்முருகன் - சத்யா தம்பதி குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு, மஞ்சினி வால்கரடு பகுதிக்கு சென்றுள்ளனர். வேல்முருகன், சத்யா இருவரும் காதில் விஷம் ஊற்றி கொண்டு, குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துள்ளனர். விஷம் குடித்த நிலையில், குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தப்பி ஓடி வந்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

உறவினர்கள் சிறுமியை ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும், சிறுவனை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். வேல்முருகன்-சத்யா இருந்த இடத்துக்கு உறவினர்கள் சென்று பார்த்த போது, இருவரும் உயிரிழந்திருந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடம் வந்த போலீஸார் தம்பதி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x