Published : 11 Jan 2021 05:21 PM
Last Updated : 11 Jan 2021 05:21 PM

பொங்கல் பரிசுப் பணத்தைச் செலவழித்த மாணவர்: பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து தற்கொலை

சென்னை

பொங்கல் பரிசுப் பணத்தை நண்பர்களுடன் சேர்த்துச் செலவழித்த கல்லூரி மாணவர், பெற்றோர் கண்டிப்பார்களே என பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (45). இவரது மகன் தமிழ்ச்செல்வன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்ததால், வீட்டில் பாட்டி பச்சையம்மாள் மட்டும் இருந்த நிலையில், தனது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இன்று திடீரென குதித்தார்.

இதைப் பார்த்த அவரது பாட்டி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம் பேரன் தமிழ்ச்செல்வன் கிணற்றில் குதித்துவிட்டதாகவும், காப்பாற்றும் படியும் கேட்டுள்ளார். கிணற்றில் குதித்த தமிழ்ச்செல்வனைப் பொதுமக்கள் மீட்க முயன்றனர். ஆனால், அது சிறிய அளவிலான உறைகிணறு என்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து மதுரவாயல் தீயணைப்புத் துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி தமிழ்ச்செல்வன் உடலை வெளியே கொண்டு வந்தனர். அதற்கு முன்பாகவே நீரில் மூழ்கி தமிழ்ச்செல்வன் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

இதுகுறித்துத் தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீஸார் தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தமிழ்ச்செல்வன் ஆடம்பரச் செலவாளி என்பது தெரியவந்துள்ளது. அவர் வீட்டிலுள்ள நகையைப் பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்து அடமானம் வைத்து நண்பர்களுக்குச் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பெற்றோர் தமிழ்ச்செல்வனைக் கண்டித்துள்ளனர். இடையில் அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது பணம் வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்ச்செல்வனைப் பொங்கல் பரிசுப் பணம் ரூ.2500 வாங்கி வர பெற்றோர் அனுப்பியுள்ளனர். பணத்தை வாங்கி வந்தவர் 2000 ரூபாயைத் தவறவிட்டதாகத் தெரிவித்து ரூ.500 மட்டும் தனது பெற்றோரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், 2 ஆயிரம் ரூபாயை அவர் செலவு செய்ததைத் தெரிந்துகொண்ட தந்தை, உன் அம்மாகிட்ட சொல்கிறேன் என்றும், கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. பணத்தைத் தொலைத்ததால் தாய் திட்டுவார் என்ற அச்சத்தில் தமிழ்ச்செல்வன் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பொங்கல் பரிசுப் பணத்தையும் நண்பர்களுக்குச் செலவு செய்ததால், பணம் குறித்து என்ன பதில் சொல்வது என்கிற பயத்தில் தமிழ்ச்செல்வன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொங்கல் பரிசுப் பணத்தைச் செலவழித்த மாணவர் அதனால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து மதுரவாயல் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x