

பெண் தொழிலாளியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த தனியார் வங்கி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் வங்கியில் பணியாற்றிய இவர் கடந்த 2015-ம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுரேஷ் குற்றமிழைத்திருப்பது உறுதியானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, சுரேஷ் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.