சிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11 பேருக்கு தண்டனை

சிறுமியை கடத்தி திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; உடந்தையாக இருந்த 11 பேருக்கு தண்டனை

Published on

கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த பிள்ளமநாயக்கர் கூடலூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(32). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி இரவு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை தனது உறவினர்கள் உதவியுடன் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார்.

இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார், ஜெயராஜ் உட்பட 13 பேரை கைது செய்தனர். கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

ஜெயராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணன் ஜெயபால்(37), தந்தை பிள்ளமநாயக்கர்(59) உள்ளிட்ட 9 பேருக்கு தலா 3 ஆண்டு, 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில், 80 வயதான சீலாநாயக்கர் என்பவர் வயது மூப்பு காரணமாக விடுவிக்கப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in