Published : 06 Oct 2020 04:12 PM
Last Updated : 06 Oct 2020 04:12 PM

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு விஷம் அருந்திவந்தவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விஷம் அருந்திய நிலையில் வந்தவர் மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியைச் சேர்ந்த தவசிதேவர் மகன் அர்ஜூன்(45). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில் 6.5 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் இவரால் தொடர்ந்து கடனை செலுத்தமுடியவில்லை. இதனால் தனியார் நிதிநிறுவனம் வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது. இதனால் மனமுடைந்த அர்ஜூன் தனது வீட்டை மீட்க மீண்டும் தனியார் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த திண்டுக்கல் வந்தார்.

இதில் பலனில்லாததால் வீடு பறிபோகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். அலுவலக நுழைவுவாயிலில் இவரை சோதனையிட்டபோது அர்ஜூன் விஷம் அருந்தியிருந்தது தெரிந்தது. அப்போது திடீரென அர்ஜூன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயங்கிவிழுந்தார்.

அங்கிருந்த போலீஸார் இவரை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x