

சங்கரன்கோவிலில் ஆம்புலன்ஸை வழி மறித்து ஓட்டுநரைத் தாக்கி, வாகன சாவியை எடுத்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் முத்துராஜ்.
இவர், கடையநல்லூர் அருகே விபத்தில் காயமடைந்தவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார்.
ஆம்புலன்ஸ் உதவியாளர் கார்த்திகேயன் உடன் இருந்துள்ளார். அப்போது, மது போதையில் இருந்த ஒரு கும்பல் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தகராறு செய்துள்ளது. இதை தட்டிக்கேட்ட ஓட்டுநர் முத்துராஜை சரமாரியாகத் தாக்கி, ஆம்புலன்ஸ் சாவியை எடுத்துக்கொண்டு அந்த நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
மாற்றுச் சாவி இல்லாததால், ஆம்புலன்ஸ் நடு ரோட்டில் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, ஆம்புலன்ஸை தள்ளி, சாலையோரத்தில் நிறுத்தினர்.
மேலும், தாக்குதலில் காயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட சங்கரன்கோவிலைச் சேர்ந்த கண்ணன் (30), முத்துப்பாண்டி (28), சங்குபுரம் பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.