

இலங்கையிலிருந்து கடத்தி வந்த தங்கத்தில் போலி தங்க கட்டிகளை கொடுத்து மோசடி செய்ததாக 3 பேரை காரில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய 5 பேரை தேவிபட்டினம் போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி சேர்ந்தவர் ரகுமான்கான் (38). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வானவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (42) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, இருவரும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 26-ந்தேதி இலங்கையில் இருந்து 5 கிலோ தங்க கட்டிகளை ரகுமான்கான் கடத்தி கொண்டு வந்துள்ளார். இதில் 3 கிலோ தங்க கட்டிகளுடன் 2 கிலோ போலி தங்க கட்டிகளை கொடுத்துள்ளார்.
தங்கத்தை விற்கச் சென்ற போது போலி தங்கம் தெரிய வந்தது. இதையடுத்து ரகுமான்கானை தேவிபட்டினம் வருமாறு சிவக்குமார் அழைத்துள்ளார்.
அதனையடுத்து ரகுமான்கான் தனது நண்பர்கள் ராவுத்தர் கனி, ஐயூப் கான் ஆகியோரை அழைத்துக்கொண்டு நேற்று தேவிபட்டினம் வந்துள்ளார்.
அவர்களை தேவிபட்டினத்தில் தயாரான நிலையில் நின்று கொண்டிருந்த காரில் ஏற்றி தேவிபட்டினம் அருகே எலந்தை கூட்டம் கிராமத்திற்கு சிவகுமார் கடத்திச் சென்று, அங்குள்ள வீட்டுக்குள் அடைத்துள்ளனர். பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் ரகுமான்கான் உள்ளிட்ட 3 பேரிடமும் தங்கத்தை கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததும் தேவிபட்டினம் காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுமான்கான், மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் மீட்டனர். அவர்களை தாக்கிய நாகப்பட்டினம் சிவக்குமார், ராமநாதபுரம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன்(30), ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சபீர் ( 30 ), பாரதி நகரைச் சேர்ந்த யாசின் ( 30), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மருதுபாண்டி( 49) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.