Last Updated : 26 Sep, 2020 01:37 PM

 

Published : 26 Sep 2020 01:37 PM
Last Updated : 26 Sep 2020 01:37 PM

நெல்லை அருகே இரு பெண்கள் அரிவாளால் வெட்டிக் கொலை: நாட்டு வெடிகுண்டுகளை வீசி கும்பல் ரகளை- போலீஸ் குவிப்பு

திருநெல்வேலி அருகே திரைப்பட பாணியில் பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை கொலை செய்த கும்பல் 20-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும் ஒரு பெண் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெறுகிறார். காதல் விவகாரத்தில் பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி என்ற இடத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் நம்பிராஜன். இவர் அதே ஊரைச் சார்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி என்ற சாந்தி என்பவரை காதலித்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

இதற்கு சாந்தியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் காதல் ஜோடி ஊரை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 26-ம் தேதி திருநெல்வேலி குறுக்குத்துறை ரயில்வே தண்டவாளத்தில் நம்பிராஜன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சாந்தியன் சகோதரர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு பழிக்குப்பழியாக கடந்த மார்ச் 20-ம் தேதி நாங்குநேரியில் உணவு விடுதி நடத்திவந்த தங்கபாண்டியனின் உறவினர்கள் ஆறுமுகம், சுப்பையா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நம்பிராஜனின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 நாட்களுக்குமுன் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நண்பகலில் 15-க்கும் மேற்பட்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் மறுகால்குறிச்சி கிராத்துக்குள் திடீரென்று புகுந்து நாட்டு வெடிகுண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் தெருக்களில் வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டது.

இதனால் அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் நாலாபுறமும் ஓடினர். அப்போது அந்த கும்பலை சேர்ந்த சிலர் நம்பிராஜனின் தாயார் சண்முகத்தாய் (48), உறவினர் சாந்தி (45) ஆகியோரின் வீடுகளுக்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியதுடன், அரிவாளால் வெட்டி சண்முகத்தாய், சாந்தி ஆகியோரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அத்துடன் சண்முகத்தாயின் தலையை துண்டித்து அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கழிவுநீரோடையில் வீசிவிட்டு கும்பல் தப்பி சென்றுவிட்டது. சாந்தியின் மகள் செல்வி (14) அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவங்களை அடுத்து மறுகால்குறிச்சியில் பதற்றம் நிலவியது. போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். காதல் விவகாரத்தில் பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஓர் அரிவாள், 2 வெடிக்காத பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் அங்கு வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் மறுகால்குறிச்சிக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் படலத்தில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படையினர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x