Published : 09 Sep 2020 08:42 AM
Last Updated : 09 Sep 2020 08:42 AM

முகநூல் காதலியை நம்பி பண்ருட்டியில் இருந்து திருச்சி வந்த இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உட்பட 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அன்புச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் வெற்றிச் செல்வன் மகன் வினோத்குமார்(31). இவருக்கும் திருச்சி காஜாமலை முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ரகமத்நிஷா(20) என்ப வருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. அதன்பின் இருவரும் வாட்ஸ்அப் மூலம் பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் வினோத்குமாரை காதலிப்பதாக நிஷா கூறியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் வினோத்குமாரை தொடர்பு கொண்ட ரகமத் நிஷா, அவரை உடனே சந்திக்க விரும்புவதாகவும் திருச்சிக்கு வருமாறும் அழைத்துள்ளார்.

இதனால், வினோத்குமார் விலையுயர்ந்த தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 5-ம் தேதி திருச்சி வந்தார். மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகில் இருந்தபடி ரகமத்நிஷாவை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, ஒரு ஆட்டோவில் அங்கு வந்த சிலர், தங்களை ரகமத்நிஷாவின் உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசி உள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் வினோத்குமாரை ஆட்டோவில் ஏற்றி கன்டோன்மென்ட் வஉசி சாலையிலுள்ள ஒரு வீட்டுக்குக் கடத்திச் சென்றனர். அங்கு ரூ.1 லட்சம் கொடுத்தால்தான் அவரை விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என வினோத்குமார் கூறியதால், விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டனர். பணத்தை கொடுத்துவிட்டு வாகனத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறி, அவரை எம்ஜிஆர் சிலை பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர், நடந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார்.

இதையடுத்து, கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க திட்ட மிட்ட போலீஸார், ரூ.1 லட்சம் தயாராக இருப்பதாகவும், அதை பெற்றுக்கொள்ள வருமாறும் வினோத்குமார் மூலம் நேற்று முன்தினம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரி வித்தனர். இதைநம்பி பணத்தைப் பெற வந்தபோது ரகமத்நிஷா, அவரது கூட்டாளிகளான வள்ளுவர்நகரைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் ஆசிக் (எ) நிவாஸ்(21), பாலக்கரை படையாச்சி தெருவைச் சேர்ந்த முகமது பாரூக் மகன் முகமது யாசர்(22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியபோது, ``கைது செய்யப்பட்டுள்ள ரகமத்நிஷா பிஎஸ்சி பட்டதாரி. அவருக்கும் அன்சாரி என்பவருக் கும் செப்.2-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த அன்சாரியும் இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்.முகநூலில் உள்ள பணக்கார இளைஞர்களிடம் திட்டமிட்டு பழகி, போலியான புகைப்படங்களை அனுப்பி ஏமாற்றி, அவர்களை நேரில் வரவழைத்து பணம், பொருட்களை பறிக்கும் செயலில் இக்கும்பல் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, முசிறியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அன்சாரி உள்ளிட்ட 3 பேரைத் தேடி வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x