Published : 06 Aug 2020 08:21 PM
Last Updated : 06 Aug 2020 08:21 PM

கோவில்பட்டியில் இளைஞர் கொலை: உறவினர்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்- 3 பேர் கைது

கோவில்பட்டியில் இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி பாரதி நகர், மேட்டுத்தெரு கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கோடீஸ்வரன் (29) என்பவரை நேற்று மாலை மர்ம நபர்கள் கொலை செய்தனர். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதேநாள் இரவு கோவில்பட்டிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

அவரது உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், ஸ்டீபன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது.

இந்நிலையில் இன்று காலை தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பார்வதி தலைமையில் கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி. கலைகதிரவன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு வழங்கினர்.

மனுவில், கொலையான கோடீஸ்வரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பாரதி நகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

இரு சமுதாயங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நல்லிணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும், பாரதி நகர் பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, தனிப்படை விசாரணை நடத்தி கோடீஸ்வரன் கொலை தொடர்பாக கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (27), காசிப்பாண்டி மகன் பாலுக்குட்டி(26), சாஸ்திரி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (24) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 3 பேரும் கோடீஸ்வரனை முன் விரோதத்தில் கொலை செய்துள்ளது தெரியவந்தது.

12 மணி நேரத்தில் கொலை வழக்கில் 3 பேரை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x