Last Updated : 03 Aug, 2020 06:39 PM

 

Published : 03 Aug 2020 06:39 PM
Last Updated : 03 Aug 2020 06:39 PM

இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் உடல் மதுரையில் தகனம்?- கியூ பிரிவு போலீஸ் மறுப்பு  

சித்தரிப்புப் படம்

மதுரை  

இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் அங்கோடா லக்கா. இவர் சர்வதேச போலீஸாரால் தேடப்படும் நிழல் உலக தாதா. போதைப் பொருள் கடத்தல் தான் இவருடைய சட்டவிரோத தொழில்.

இந்நிலையில், அங்கோடா லக்கா கோவையில் ஒரு பெண் வீட்டில் பதுங்கி இருந்தாகவும், உடல் நலக்குறைவால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், அவரது அடையாளத்தை திட்டமிட்டு மறைத்து மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

அங்கோடா லக்காவின் அடையாளங்களை மறைத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப் சிங் என்ற பெயருடன் மதுரையில் வசித்ததாக போலி ஆதார் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாது, கோவை அரசு மருத்துவமனையில் மேற்கூறிய போலி தகவல்களுடன் லக்காவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரின் மரணம் இயற்கையானது என சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் 2 நாட்களுக்கு முன் மதுரைக்கு எடுத்து வரப்பட்டு தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

போலி ஆவணம் தயாரித்ததாக மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேர் கோவை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், லக்காவை அவரது தோழியே விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரின் இறப்பு இயற்கையானது என எப்படி சான்றிளிக்கப்பட்டது என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

லக்கா தலைமறைவாக இருந்து கொண்டு, இறந்த மற்றொருவர் உடலை காட்டி அவர் தான் லக்கா என, நாடகமாடப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் போலீஸார் விட்டுவைக்கவில்லை.

சர்வதே போலீஸாரால் தேடப்படும் நிழலுலக தாதாவின் உடல் மதுரையில் போலி அடையாளத்துடன் தகனம் செய்யப்பட்டதா என்பது குறித்து மதுரை கியூ பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘ நாங்கள் விசாரித்தவரை மதுரையில் அங்கோடா லக்காவின் உடல் தகனம் செய்யப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியை கோவை போலீஸார் மதுரையில் கைது செய்துள்ளனர்.

கோவை போலீஸார் தான் வழக்கை விசாரிக்கின்றனர். இருப்பினும், லக்காவிற்கும் மதுரைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x