Published : 27 Jul 2020 08:04 PM
Last Updated : 27 Jul 2020 08:04 PM

கயத்தாறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரி சந்தனத்தின் உறவினர்களுடன் டி.எஸ்.பி.கலைகதிரவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோவில்பட்டி 

கயத்தாறில் வியாபாரியை அடித்துக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கயத்தாறு ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்தவர் சந்தனம்(48). மீன் வியாபாரி இவர், நேற்று காலை படபடப்பாக வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை கயத்தாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தனம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தனத்தின் உடலுடன் வந்த உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சந்தனம் நேற்று முன்தினம் இரவு முதல் வீட்டில் யாரிடம் பேசாமல் இருந்தார். அவரது உடலில் காயங்கள் உள்ளன. இதனால், அவரை சிலர் தாக்கியுள்ளனர். அதனால் அவர் இறந்துள்ளார். எனவே, அவரை தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என கூறினர்.

தகவல் அறிந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் அங்கு வந்து, சந்தனத்தின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்தனம் இறப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதில், சந்தனத்தை யாராவது தாக்கியிருந்தார்கள் என தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, சந்தனத்தின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x