கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் பிடிபட்ட குமுளி ராஜ்குமார் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் பிடிபட்ட குமுளி ராஜ்குமார் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Updated on
1 min read

ஈரோட்டில் இருந்து மருத்துவ அவசர இ-பாஸ் பெற்றுக்கொண்டு துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்த குமுளி ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் காவல் சோதனைச் சாவடியில் கடந்த 16-ம் தேதி அதிகாலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீஸார் பணியில் இருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில், காரில் 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் 2 அரிவாள்கள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (37), பாளையங்கோட்டை படப்பைகுறிச்சி காந்தி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (26), திருநெல்வேலி கொக்கிரகுளம் மேலநத்தத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சுரேந்தர் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குமுளி ராஜ்குமார் மீது 7 கொலை வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 26 வழக்குகள் உள்ளன. வினோத் மீது 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளன. சுரேந்தர் மீது ஆள் கடத்தல் வழக்கு உள்ளது.

இதையடுத்து இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், ஆய்வாளர் சுதேசன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பரிந்துரைத்தார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குமுளி ராஜ்குமார் கடலூர் சிறையிலும், வினோத், சுரேந்தர் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in