Published : 27 Jun 2020 11:51 AM
Last Updated : 27 Jun 2020 11:51 AM

எட்டயபுரத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: வட்டாட்சியர் அலுவலகம் முன் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

கோவில்பட்டி

எட்டயபுரத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

எட்டயபுரம் மேலத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி (29). கட்டித்தொழிலாளியான இவர் கடந்த 20-ம் தேதி மாலை மதுபோதையில் பைக்கில் சென்றபோது தவறி விழுந்துள்ளார்.

இதில் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் மதுபான கடைக்கு மீண்டும் சென்று மது அருந்தியுள்ளார். ரத்தக் காயங்களுடன் ஒருவர் மது அருந்துவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்பிரிவு காவலர் கார்த்திக் உள்ளிட்ட போலீஸார் மதுபான கடைக்கு விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தபோது விபத்து எனத் தெரிய வந்ததால் கணேசமூர்த்தியை எச்சரித்து எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

கடந்த ஒரு வாரமாக மோட்டார் சைக்கிளை மீட்டுச் செல்லாத கணேசமூர்த்தி, நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற எட்டயபுரம் போலீஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கடந்த 20-ம் தேதி போலீஸார் கணேசமூர்த்தியைத் தாக்கி அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டதாலும், குடும்பத்துக்குள் பிரச்சினை தொடர்ந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருந்த கணேசமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் போலீஸார் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கணேசமூர்த்தி எழுதியதாக ஒரு கடிதத்தையும் புகார் மனுவில் இணைத்துள்ளனர். இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவலறிந்து கணேசமூர்த்தி உறவினர்கள் மற்றும் ஏராளமானோர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். மேலும், கணேசமூர்த்தி தாக்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி ராமலட்சுமி மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களிடம் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் அழகர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் பீர் முகைதீன், கலைக்கதிரவன் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

இதனால் எட்டயபுரம் அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதே தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மீண்டும் ஒரு சம்பவம் போலீஸாரை நோக்கி மையம் கொண்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x