Published : 22 Jun 2020 10:32 PM
Last Updated : 22 Jun 2020 10:32 PM

கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் தந்தை, மகன் உயிரிழப்பு 

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(58). இவர் அப்பகுதியில் பனமரக்கடை நடத்தி வந்தார். இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

கடந்த 19-ம் தேதி இரவு ஜெயராஜ், பென்னிக்ஸ் ரோந்துப் பணியின்போது, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தலைமை காவலர் முருகன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காவல் நிலையத்தில் அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் 21-ம் தேதி அவர்கள் இருவரையும் போலீஸார் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7.45 மணிக்கு பென்னிக்ஸ், நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார்.

இதையடுத்து கிளைச் சிறை வார்டன்கள், கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் பென்னிக்ஸை கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அதற்குள் பென்னிக்ஸ் உயிரிழந்தார்.

இது தொடர்பாக கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், ஆய்வாளர்கள் சுதேசன், ஐயப்பன் மற்றும் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை ஜெயராஜ் நேற்று இரவு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று 4.30 மணிக்கு உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது பிரேத பரிசோதனை முடிவில் தான் அவரது இறப்பு குறித்த உண்மை நிலவரம் தெரியவரும்.

கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தையும், மகனும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த மாதம் திருமணம்

உயிரிழந்த ஜெயராஜ் சாத்தான்குளத்தில் பனமரக்கடையும், தனியார் லாரி புக்கிங் ஏஜென்சி நடத்தி வந்தார். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு 3 மகள்களும், பென்னிக்ஸ் என்ற மகனும் இருந்தனர்.

இதில், பென்னிக்ஸூக்கு பெண் நிச்சயக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்குள் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டு தந்தையும், மகனும் மர்மமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x