

கோவில்பட்டியில் இ-பாஸை தவறாகப் பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி ராஜீவ் நகர் இ.பி. காலனியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (47). இவர் கடம்பூர் அருகே வீரபாண்டியபுரம் உள்ள தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஜூன் முதல்வாரத்தில் மருத்துவ அவசர தேவை என இ-பாஸ் பெற்று சென்னை சென்று வந்துள்ளார். கோவில்பட்டிக்கு திரும்பிய பின்னர் அவர் சென்னை சென்று வந்தது குறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்கவில்லை. மேலும், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமலும் இருந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தினர். இதில், தலைமையாசிரியர் அமல்ராஜ் மருத்துவ அவசர தேவைக்கு என பெற்ற இ-பாஸை தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் அமல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமையாசிரியர் அமல்ராஜை தனிமை முகாமில் தங்க வைத்தனர். அங்கு அவருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.