

தூத்துக்குடி சாந்தி நிகேதன் நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (48). பொறியாளரான இவரது வீட்டுக்கு அடுத்த வீட்டில் மளிகைப்பொருட்கள் ஏஜென்சி எடுத்து நடத்தி வரும் உபைதுல்லா ரகுமான் (33) என்பவர் வசித்து வருகிறார்.
இதில் ஜெயபிரகாஷ் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றவர் கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்கு வரமுடியாமல் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
அதேபோல் உபைதுல்லா ரகுமான் தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் அவரை பார்க்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சேதுக்குவாய்த்தான் என்ற ஊருக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு இரண்டு வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 3 பீரோக்கள், மேஜை டிராயர்கள் அனைத்தையும் திறந்து தேடியுள்ளனர். ஆனால் இரண்டு வீடுகளிலும் நகை, பணம் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பீரோக்களில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்களை வீடு முழுவதும் சிதறி போட்டுள்ளனர்.
மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.