தூத்துக்குடியில் காவலர் குத்திக் கொலை: பூங்கா காவலாளி கைது
தூத்துக்குடியில் காவலரை கத்தியால் குத்திக் கொலை செய்த பூங்கா காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சே.புங்கலிங்கம் (34). இவர், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 8-ம் தேதி இரவு தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த பூங்கா காவலாளியாக பணிபுரியும், தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் கிராமத்தைச் சேர்ந்த பொ.செல்வம் (44) என்பவருக்கும், காவலர் புங்கலிங்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பூங்கா காவலாளி செல்வம், காவலர் புங்கலிங்கத்தை தன்னிடம் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
