

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற ராஜிபாய் (37). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 3-ம் தேதி திருவண்ணாமலை சாலையில் ஒரு சுடுகாட்டில் கை தனியாகத் துண்டிக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார். அவரது கை பாரதியார் நகர் 4-வது குறுக்குத் தெருவில் ஒரு வீட்டின் முன்பு கிடந்தது. இக்கொலை தொடர்பாக, கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இக்கொலையில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தமிழரசன் (35) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் நேற்று (ஜூன் 8) இரவு கைது செய்யப்பட்டார்.
இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, லாரி ஓட்டுநர் தமிழரசன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கிருஷ்ணகிரி பாரதியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்த தமிழரசன், வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்தார்.
அப்போது, அவரது மனைவிக்கும், பாலசுப்பிரமணி (எ) ராஜிபாய் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும் மனைவி கேட்காததால், ஆத்திரமடைந்த தமிழரசன், சம்பவத்தன்று பாலசுப்ரமணியனின் வலது கையைத் துண்டித்து கொலை செய்து மனைவியை மிரட்டுவதற்காக அந்தக் கையை அவரது வீட்டின் முன்பு வீசியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.