Published : 03 Jun 2020 04:27 PM
Last Updated : 03 Jun 2020 04:27 PM

தலை துண்டிக்கப்பட்டு, கைகள் அறுக்கப்பட்டு இளம்பெண் கொலை- ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளி

ஓராண்டுக்கு முன்பாக பஞ்சாபைச் சேர்ந்த பணக்காரப் பெண்ணின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட நிலையில் மீரட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை போலீஸாருக்குக் கடும் சவாலாக இருந்தது, துப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர், ஆனாலும் விசாரணையை பல கோணங்களில் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் கொலையாளி செவ்வாயன்று சிக்கியதாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் லூதியானாவைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணின் பெயர் ஏக்தா ஜஸ்வால், இவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய டாக்ஸி வர்த்தகத் தொழில் இருந்தது, பணக்காரப் பெண், வயது 19 தான் ஆகிறது.

இந்நிலையில் அந்தப் பெண் மொகமட் ஷாகிப் என்ற அந்த 20 வயது பையனைச் சந்தித்து காதல் வலையில் விழுந்தார். இருவரும் பல வாரங்கள் காதலில் திளைத்தனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்க வாய்ப்பேயில்லை என்பதால் ஏக்தா ஜஸ்வால், மொகமட் ஷாகிபுடன் ஓடிப்போய் விட்டார். அவருடனேயே இருப்பதற்காக தன் செல்வந்த குடும்பத்தையும் அன்பான பெற்றோரையும் உற்றார் உறவினரையும் துறந்து காதலுடன் கைகோர்த்தார். இந்நிலையில்தான் ஏக்தா ஜஸ்வாலின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் அறுக்கப்பட்ட நிலையில் மீரட்டில் வயல்வெளியில் கிடந்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக துப்புத்துலக்கப்பட்டு நேற்று மொகமட் ஷாகிப் மற்றும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர். தங்க நகைகள், ரொக்கம், கொல்லப்பட்ட ஏக்தா ஜஸ்வாலின் மொபைல் போன் ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.

கொலையாளியைக் கைது செய்து வந்த போது செய்தியாளர்கள் சந்திப்பில் பெண்ணை இழந்த குடும்பத்தினர் மொகமட் ஷாகிப்பை தாக்கினர். தலையைத் துண்டித்தால் அடையாளம் தெரியாது, ஆனால் கைகள் ஏன் துண்டிக்கப்பட்டன என்றால் அதில் ஷாகிப் பெயரை அந்தப் பெண் பச்சைக் குத்தியிருந்ததால் கண்டுப்பிடித்து விடுவார்கள் என்று கைகளையும் துண்டித்துள்ளான்.

ஷாகிபை போலீசார் ஏக்தா ஜஸ்வாலின் தலை மற்றும் கைகளை எங்கே மறைத்தான் என்பதைக் காட்ட அழைத்துச் சென்ற போது போலீஸ் ஒருவரின் ரிவால்வரை உருவி தப்ப முயன்றான், ஆனால் அவன்கால்களில் மூன்று தோட்டக்கள் பாய அவனால் தப்ப முடியவில்லை. தற்போது மருத்துவமனையில் இருக்கிறான் மொகமட்.

ஏக்தா ஜஸ்வாலைக் கொன்ற மொகமட் அவர் உயிருடன் இருப்பது போலவே அவரது வாட்ஸ் அப் கணக்கில் எதையாவது பகிர்வது என்றபடிக்கு அவர் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் காட்டியுள்ளான்.

இவன் தன்னைக் காதலிக்கவில்லை தன் பணத்துக்கும் நகைக்குமாக நடிக்கிறான் என்று ஏக்தா ஜஸ்வால் மோப்பம் பிடித்ததையடுத்து கொலை செய்துள்ளான் என்று மீரட் போலீஸ் அதிகாரி அஜய் சஹானி தெரிவித்தார்.

ஒரு தென்கொரியப் படத்தி வருவது போல், நம் சைக்கோ படத்தில் வருவது போல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண்ணின் உடல் தலையின்றி கிடந்தது. இதுதான் ஏக்தா ஜஸ்வால் என்பதைக் கண்டுப்பிடிக்கவே போலீஸாருக்கு மாதங்களாயின. போன்கால் வரலாறு, காணாமல் போனதாக புகார் அளித்தவர்கள் பட்டியல் என்று போலீஸார் முழு வீச்சுடன் இயங்கி கடைசியில் புள்ளியைக் கோலமாக்கினர்.

லூதியானாவில் ஜஸ்வாலை அடிக்கடி சந்தித்த மொகமட் தன்னை இந்துமதத்தைச் சேர்ந்தவர் போல் காட்டிக் கொண்டதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலிப்பது போல் ஆசைகாட்டியதில் ஜஸ்வால் தன் குடும்பத்திலிருந்து நகை பணம் உட்பட ரூ.25 லட்சம் மதிப்புடைய பொருட்கள், பணத்துடன் மொகமட் உடன் ஓடிப்போனார்.

ஜஸ்வாலிடமிருந்து ரொக்கத்தையும் நகைகளையும் சுருட்ட நினைத்த மொகமட் குடும்பத்தினர், ஜஸ்வாலுக்கு கூல்ட்ரிங்க்ஸில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x