Last Updated : 13 May, 2020 07:52 PM

 

Published : 13 May 2020 07:52 PM
Last Updated : 13 May 2020 07:52 PM

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.80 கோடி மோசடி: ஊரடங்கால் வீட்டில் பதுங்கிய நபர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.1.80 கோடி மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் எட்வர்ட் மகன் கோயில்ராஜ் (39). இவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.

இவர் புதுக்கோட்டை நியூ காலனியை சேர்ந்த பொ.கனகராஜ் (36) என்பவரின் மனைவிக்கு அரசு செவிலியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக பல முறை கேட்டும் கோயில்ராஜ் முறையாக பதில் சொல்லவில்லையாம்.

இதனால் கனகராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோயில்ராஜ் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மேலும் சிலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.80 கோடி வரை பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கோயில்ராஜை தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்து வந்த கோயில்ராஜ், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் பதுங்கி இருந்துள்ளா். இதையறிந்து புதுக்கோட்டை போலீஸார் அவரை நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x