Last Updated : 11 May, 2020 09:34 PM

 

Published : 11 May 2020 09:34 PM
Last Updated : 11 May 2020 09:34 PM

மாணவிகளுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பரவிய அதிர்ச்சித் தகவல்: மதுரை ஆணையர் உத்தரவு- தனிப்படை போலீஸார் விசாரணை

மதுரை நகரில் உணவகம், மொபைல் போன் கடைகள் நடத்தும் மூன்று இளைஞர்கள் கல்லூரி, பள்ளி மாணவிகள் சிலரை தங்களது வலையில் சிக்க செய்து, அவர்களை தவறாக வழி நடத்தி பணம் சம்பாதிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலானது.

இது தொடர்பாக மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவிய இத்தகவல் உண்மையா, வேண்டு மென்றே பரப்புகிறார்களா இத்தகவலை பரவவிட்டவர்கள் யார் என்ற கோணத்தில் சைபர் கிரைம் மற்றும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவியர் யாரும் புகார் கொடுக்க தயங்கும் நிலையில், சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களே தாமாக முன்வந்து, தங்களது தொழிலுக்கு எதிராக யாரோ இது போன்ற தவறான கருத்துக்களை தங்கள் மீது பரப்புகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, போலீஸில் புகார் கொடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறு கின்றனர்.

பொள்ளாச்சி சம்பவ சாயலைப் போன்ற இத் தகவல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கடந்த ஒருவாரமாகவே சமூக வலைதளம், வாட்ஸ்ஆப்-பில் இத் தகவல்கள் சுற்றுக்கின்றன. எங்களது கவனத்துக்கும் வந்தால் உண்மையாக என்ற அடிப்படையில் விசாரிக்கிறோம்.

காவல் ஆணையரின் சிறப்பு போலீஸ் குழு இது பற்றி விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் தகவல்களை கசியவிட்ட நபர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீ ஸாரும் ஆய்வு செய்கின்றனர்.

இதன்மூலம் கிடைக்கும் சில ஆதாரங்களை பொறுத்தே அந்த சம்பவம் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்த முடியும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் புகார் கொடுக்கலாம்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x