

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே முயல் வேட்டையாடி, அதனை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்ட இளைஞரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடியை சேர்ந்தவர் மலையாண்டி. இவர் அந்த பகுதியில் உள்ள காட்டில் முயல் வேட்டையாடியுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகர் எஸ்.விமல்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அவரை தேடிப்பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவர் மீது இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்- 1972-ன் கீழ் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், இதுபோன்று வனவிலங்கு வேட்டையில் யாராவது ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.