

தூத்துக்குடியில் குடோனில் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 600 டன் உரம் மாயமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் திருச்செங்கோடு மெயின் சாலை பகுதியை சேர்ந்தவர் ராம் ஈஸ்வரன். இவர் அந்த பகுதியில் உரம் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 19.10. 2019-ல் தூத்துக்குடியில் சுங்கத் துறை ஏலமிட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 600 மெட்ரிக் டன் உரத்தை ஏலம் எடுத்துள்ளார். ஆனால், அந்த உரத்தை ஆய்வு செய்த பின்னரே விற்பனைக்கு பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை தடை விதித்தது.
இதையடுத்து அந்த உரம் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த உரத்தை மீண்டும் ஆய்வு செய்வதற்காக வேளாண்துறை அதிகாரிகள் நேற்று அங்கு சென்றபோது குடோனில் இருந்த உரத்தை காணவில்லை.
தடையை மீறி உரத்தை ராம் ஈஸ்வரனே எடுத்து விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் துறை துணை இயக்குநர் (தர்க்கட்டுப்பாடு) வசந்தி தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.