Last Updated : 08 Apr, 2020 10:56 AM

 

Published : 08 Apr 2020 10:56 AM
Last Updated : 08 Apr 2020 10:56 AM

சொந்த வீட்டில் மனைவியே நகை திருடி நாடகமாடியது அம்பலம்: துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

தன்மீது நம்பிக்கை இல்லாமல் சொந்தவீட்டில் மனைவியே நகையைத் திருடி ஒளித்துவைத்து நாடகமாடியதாம் மனமுடைந்த துறைமுக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வந்தவர் வின்சென்ட், துறைமுக ஊழியர். இவர் தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது.

இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் நடத்திய விசாரணையில் விண்சென்டின் மனைவி ஜான்சியே சொந்தவீட்டுக்குள் நகை திருடியது தெரியவந்தது.

போலீஸார், ஜான்சியிடம் நடத்திய விசாரணையில், " வீட்டிலிருக்கும் நகை, பணத்தை 2 மகள்களுக்கும் பிரித்துக்கொடுக்க முடிவு செய்தேன்.

ஆனால் மதுபோதைக்கு அடிமையான தன் கணவர், குடிப்பதற்காக நகைகளை விற்று விடுவாரோ என்ற பயத்தில், அந்த நகைகளை நானே திருடி வீட்டிற்கே எதிரே உள்ள எங்களுக்கு சொந்தமான காலி இடத்தில் மண்ணுக்குள் புதைத்தாக வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜான்சி அளித்த தகவலின்படி, அவரின் வீட்டுக்கு எதிரேஉள்ள காலி இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகளை போலீஸார் மீட்டு வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

நகைகளைத் திருடி ஒளித்துவைத்து நாடகமாடிய ஜான்சியை போலீஸ் கைதுசெய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.

இந்தநிலையில், கட்டிய மனைவியே தன்மீது நம்பிக்கை இல்லாமல் சொந்தவீட்டில் நகையை திருடி ஒளித்துவைத்து நாடகமாடியது வின்சென்டுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இது அக்கம்பக்கதினரிடையே அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், நள்ளிரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x