

100 பவுன் நகை கொள்ளை போனதாக நாடகம் ஆடிய தூத்துக்குடி துறைமுக ஊழியரின் மனைவி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் சவேரியார் பிச்சை (59). வ.உ.சி. துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி ஜான்சி ராணி. இவர்களது 2 மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை யாரோ மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜான்சி ராணி (57), கணவரின் கஞ்சத்தனத்தின் காரணமாக நகையைத் திருடியதோடு குடும்பத்தாரை ஏமாற்றும் விதமாக கொள்ளைச் சம்பவ நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்தது.
காவல்துறையினர் ஜான்சிராணியிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதில் தனது வீட்டருகே உள்ள வெற்றிடத்தில் நகையை புதைத்து வைத்து இருப்பதை ஒப்புக்கொண்டு நகை புதைத்த இடத்தை காவல்துறையிடம் சுட்டி காட்டி 100 பவுன் தங்க நகையை ஒப்படைத்தார்.
இதையடுத்து ஜான்சிராணியை போலீஸார் கைது செய்தனர்.