லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி மாரடைப்பால் மரணம்

உயிரிழந்த அதிகாரி ஜெயந்தி ராணி
உயிரிழந்த அதிகாரி ஜெயந்தி ராணி
Updated on
1 min read

கரூரில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சொல்லும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் ஜெயந்தி ராணி, வயது 50.

இவர் நேற்று (மார்ச் 18) வீட்டுமனை பிரிப்புக்காக அனுமதி வழங்குவதற்காக பவித்திரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடமிருந்து ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நேற்று இரவு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நீதிபதி வீட்டுக்கு ஜெயந்தி ராணியை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அங்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்கு காத்திருந்தனர். அப்போது ஜெயந்தி ராணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உக்யிரிழந்தார்.

இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in