Published : 04 Mar 2020 04:38 PM
Last Updated : 04 Mar 2020 04:38 PM

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்த முயன்ற 14 கிலோ தங்கம் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குக் கடத்த முயன்ற 14 கிலோ எடையுள்ள சுமார் ரூ.6.16 கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டது.

தங்கம் கடத்தல் தொடர்பாக இரண்டு இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடத்தல் குறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா தீவுகள் மற்றும் ராமேசுவரம் தீவு, மணல் தீடைகள் உள்ளன. இங்கிருந்து, கடல் மார்க்கமாக இலங்கை செல்வது எளிது.

இதனால், இலங்கையில் இருந்து தங்கமும், தமிழகத்திலிருந்து கஞ்சா, போதைப் பொருட்களும் கடத்தப்படுவதால் எல்லைப் பகுதிகளில் கடற்படை, கடலோர காவற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மண்டபம் அருகே முயல் தீவு கடற்பகுதியில் கடலோர காவற்படைக்குச் சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் செவ்வாய்கிழமை மாலை ரோந்து சென்றனர்.

அப்போது பதிவு செய்யப்படாத ஒரு பைபர் படகினிலிருந்த இரண்டு இளைஞர்களை விசாரித்தனர். இருவரும் இலங்கையிலிருந்து தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்ததாகவும் தங்கத்தை முயல் தீவு அருகே கடலில் போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கடலோர காவல்படையின் நீச்சல் பிரிவு வீரர்கள் முயல் தீவு கடலில் போடப்பட்ட சுமார் 14 கிலோ தங்கத்தைக் கைப்பற்றினர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் மரைக்காயர் பட்டிணத்தை சார்ந்த ஆஷிக் (23), பாரூக் (22) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து இருவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களின் விவரங்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x