

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்துப் பிரச்சனை காரணமாக காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நபர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா என்பவரது மகன் ஜோதிமுருகன் (47).
ஜோதிமுருகனின் தந்தை கந்தையா பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் மகள் லட்சுமி பெயரில் எழுதி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்த நிலையில் சொத்துப் பிரச்சனை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 22-ம் தேதி மல்லி காவல் நிலையத்தில் ஜோதிமுருகன் புகார் கொடுத்துள்ளார்.
காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 23-ம் தேதி மாலை திடீரென மல்லி காவல் நிலையம் முன்பு ஜோதிமுருகன் தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த ஜோதிமுருகனை சிவகாசி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதற்கிடையில், ஜோதி முருகன் தாமாக தீ வைத்துக் கொண்டிருக்க மாட்டார், எதிர்தரப்பினரே தீ வைத்திருக்க வேண்டும். இதற்குப் போலீஸாரும் உடந்தையாக இருந்திருக்க வேண்டும் எனத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.