Published : 13 Feb 2020 09:17 PM
Last Updated : 13 Feb 2020 09:17 PM

சென்னையில் அடுத்த 15 நாட்களுக்கு ஊர்வலம், போராட்டத்துக்கு தடை: காவல் ஆணையர் உத்தரவு

பிரிவு 41-சென்னை நகர போலீஸ் சட்டம்-1888 -ன் கீழ் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள், பொதுக்கூட்டம் , உண்ணாவிரதம், பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிப்பதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொந்தளிப்பான நேரங்களில், போராட்டக் காலங்களில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காலங்களில் பிரிவு 41-சென்னை நகர போலீஸ் சட்டம்-1888 -ன் கீழ் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள், பொதுக்கூட்டம் , உண்ணாவிரதம், பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், கும்பலாகக் கூடுதல், மனிதச் சங்கிலி உள்ளிட்ட அனைத்துக்கும் காவல் அனுமதியின்றி நடத்தக்கூடாது என அறிவிக்கப்படும். இதற்கு 5 நாட்களுக்கு முன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

முக்கியமான பிரச்சினைக்குரிய காலங்களில் காவல் ஆணையர் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை உத்தரவு பிறப்பிப்பார். இந்நிலையில் பிப்ரவரி 13 இன்றுமுதல் 28 வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து சென்னை நகர காவல் சட்டம் 41-ன் கீழ் சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்ற பொது நிகழ்ச்சி நடத்த விரும்புவோர் 5 நாட்களுக்கு முன் காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x