

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காணாமல் போன இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அது கொலையா? தற்கொலையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பொட்டல்பட்டி அருந்ததியர் காலணி பகுதியில் வசித்து வருபவர்கள் முனியாண்டி, கிருஷ்ணம்மாள் தம்பதியினர்.
இவர்களின் 21 வயது மகாலட்சுமி. இவர் தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அந்தப் பெண் காணாமல் போன நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அந்தப் பகுதிமக்கள் வன்னியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சடலமாக கிடந்த இளம்பெண் மகாலட்சுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் வன்னியம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.