Published : 10 Feb 2020 03:35 PM
Last Updated : 10 Feb 2020 03:35 PM

ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது: சென்னையில் நம்பர் பிளேட்டை படமெடுக்கும் சிசிடிவி கேமராக்கள் அதிகரிப்பு

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்துவரும் நிலையில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைப் படமெடுக்கும் நவீன ஏஎன்பிஆர் கேமராக்கள் சென்னையில் அதிகமாகப் பொருத்தப்பட்டு வருகின்றன. இன்றும் சில இடங்களில் திறந்து வைக்கப்பட்டன.

இந்தக் கேமராக்கள் மிகவும் விலை உயர்ந்தவை. நவீன வகையைச் சேர்ந்தவை. இவை சிக்னல்களில் பொருத்தப்பட்டு சென்னை போக்குவரத்துக் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கேமராக்கள் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும். சாலை விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டைத் தானாகப் படமெடுத்துக் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பி விடும்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு போலீஸார் அபராதத் தொகையுடன் நோட்டீஸ் அனுப்புவார்கள். அபராதத் தொகை நோட்டீஸ்தானே எனக் கட்டாமல் விட்டால் இரண்டு, மூன்று முறைக்மேல் நடந்தால் அது கணக்கெடுக்கப்பட்டு வாகனத்தை போலீஸார் பிடித்து பறிமுதல் செய்வார்கள்.

அதே வாகனம் வேறு எங்காவது சிக்கினால் பழைய போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த அத்தனை விவரங்களும் போலீஸார் சோதனையிடும்போது தகவலாக இருக்கும். அதனால் விதிமீறலில் ஈடுபட்டபின் தப்பிக்க வாய்ப்பில்லை. வாகனங்கள் இவ்வழியாகக் கடப்பதை தொடர்ச்சியாகப் படம் பிடிப்பதால், எந்த நேரம், எந்த இடம் என்பதைத் துல்லியமாகப் படம் எடுத்து அனுப்புவதால் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த தகவல்களும் போலீஸாருக்கு எளிதாகக் கிடைக்கும். சாலைப் போக்குவரத்து விதிமீறல் வாகனங்களும் சிக்கும்.

ஏற்கெனவே சென்னை திருமங்கலம் உள்ளிட்ட சில இடங்களில் இத்தகைய ANPR (Automatic Number Plate Recognisation) சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்ட நிலையில் இன்று நந்தனம், கிண்டி, டைடல் பார்க் ஆகிய இடங்களில் புதிதாக பொருத்தப்பட்டு திறக்கப்பட்டன. இம்மூன்று இடங்களிலும் தலா 3 கேமராக்கள் வீதம் 9 ANPR (Automatic Number Plate Recognisation) சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் இயக்கத்தை பயன்பாட்டிற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை ரன்னர்ஸ் அசோஷியேஷன் சார்பில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சென்னை நந்தனம் சந்திப்பில் 3 சிசிடிவி கேமராக்கள், கிண்டி சந்திப்பில் 3 சிசிடிவி கேமராக்கள், டைடல் பார்க் சந்திப்பில் 3 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 9 ANPR சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்றது.

இதில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு 3 இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் மற்றும் போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “சென்னை முழுவதும் உள்ள 335 சாலைகளில் 25 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைவதோடு மக்களின் பாதுகாப்பு குறித்த ஐயப்பாடு விலகியுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் வந்த பின்னர் வழிப்பறி தாக்குதல், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பித்தல் (Hit and Run Cases) உள்ளிட்ட வழக்குகளில் 76% போக்குவரத்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ANPR சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து அந்த வாகனம் எந்த நேரத்தில் எந்தச் சாலையைக் கடந்துள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் குற்றம் செய்துவிட்டு தப்பித்துச் செல்ல முயல்பவர்கள் யாராயினும் எளிதில் பிடிக்க முடியும்” எனப் பேசினார்.

தவறவிடாதீர்!

பிப்.17-ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: திமுக அறிவிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x