Published : 08 Feb 2020 04:51 PM
Last Updated : 08 Feb 2020 04:51 PM

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து: மாணவி உயிரிழப்பு; பள்ளிக்கு சென்ற போது நேர்ந்த பரிதாபம்

நாகை மாவட்டத்தில், மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் இறந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் மகரஜோதி (16). நாகூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று (பிப்.8) பள்ளிக்கு செல்ல தாமதமாகி விட்டதால், தன் உறவினர் வீரமணியின் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். இதில், மகரஜோதி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தார்.

வேளாங்கண்ணியில் இருந்து பரவை கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேதாரண்யத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்து, மோட்டார் சைக்கிளின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகரஜோதியும், வீரமணியும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மகரஜோதியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தார். வீரமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x