Published : 06 Feb 2020 01:50 PM
Last Updated : 06 Feb 2020 01:50 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: முக்கியக் குற்றவாளி ஜெயக்குமார் சரணடைந்தார்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

குரூப்- 4 தேர்வு முறைகேடு விவகாரம் பூதாகரமாக எழுந்த சூழ்நிலையில் இதற்கு மூளையாகச் செயல்பட்ட இரண்டு முக்கிய இடைத்தரகர்கள் ஜெயக்குமார் மற்றும் காவலர் சித்தாண்டி இருவரையும் சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். இதில் முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் சிக்கினால் குரூப்-4 தேர்வு முறைகேடு பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை ஜெயக்குமார் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் முகப்பேர் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் 10 மணிநேரமாகச் சோதனை நடத்தினர். சோதனையில் லேப்டாப், பென்ட்ரைவ் உள்ளிட்ட முக்கிய தடயங்களைப் பறிமுதல் செய்தனர்.

ஜெயக்குமார்

ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீஸார் தேடிவரும் நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை விரிவடைந்துகொண்டே செல்கிறது.

அடுத்தபடியாக குரூப்-2(ஏ) தேர்விலும் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதில் தினமும் குறைந்தது 2-க்கும் மேற்பட்டோர் கைதாகி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டியை போலீஸார் கைது செய்தனர். ஜெயக்குமார் மட்டும் சிக்காமல் இருந்தார்.

ஜெயக்குமார் சிக்கினால் மட்டுமே இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள், வேறு முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகும். இந்நிலையில் ஜெயக்குமார் பற்றிய தகவலோ, அவர் இருக்குமிடம் குறித்த தகவலையோ பொதுமக்கள் அளிக்கலாம் அவ்வாறு அளிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்து செல்போன் எண்களையும் அளித்திருந்தனர்.

சிபிசிஐடி போலீஸார் சார்பில் போஸ்டர்களும் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சிபிசிஐடி போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், இன்று காலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கௌதமன் முன்னிலையில் ஜெயக்குமார் சரணடைந்தார். இடைத்தரகர் ஜெயக்குமாரை நாளை வரை (பிப்.7) சிறையில் வைக்கவும், அவரை புழல் சிறையில் அடைக்கவும் குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார். நாளை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் 23 வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கவுதம் உத்தரவிட்டார்.

ஜெயக்குமார் சரணடைந்ததை அடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள். இதையடுத்து அவரை விசாரணை நடத்த குற்றவியல் நடுவர் அளிக்கும் அனுமதியை அடுத்து, ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

தவறவிடாதீர்!

பாதுகாப்பு கோரி முருகதாஸ் மனு: காவல்துறை விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுவனிடம் காலணியைக் கழற்றச் சொன்ன விவகாரம்: என் பேரனாக நினைத்துச் சொன்னேன்; வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிஏஏ பாதிப்பை ரஜினி தெரிந்துகொள்ளாதது வருத்தமே: ஸ்டாலின் கருத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x