Published : 04 Feb 2020 09:55 PM
Last Updated : 04 Feb 2020 09:55 PM

தமிழக காவல்துறை இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் நிலைக் காவலருக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) காவல், சிறை மற்றும் தீயணைப்புத் துறைகளிலுள்ள 8,826 மற்றும் 62 (பின்னடைவு காலிப் பணியிடங்கள்) இரண்டாம் நிலைக் காவலர், (சேமநலப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுத்தேர்வுக்கான அறிவிப்பினை கடந்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்திலுள்ள 32 மாவட்ட மையங்களில் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து 15 மையங்களில் உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்பட்டன.

இறுதியாக 2,410 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலைக் காவலர்கள் மாவட்ட- மாநகர ஆயுதப்படைக்கும், 5,962 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலைக் காவலர்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கும் 210 விண்ணப்பதாரர்கள் சிறைத்துறைக்கும் மற்றும் 191 விண்ணப்பதாரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 8,773 விண்ணப்பதாரர்கள் 2,432 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் உட்பட இந்த 2019 பொதுத்தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முழுமையான இனச் சுழற்சி விவரங்களுடன் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் இக்குழும இணையதளம் www.tnusrbonline.org -ல் (04-02-2020) வெளியிடப்பட்டுள்ளது’’.

இவ்வாறு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x