பரமக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பள்ளிச் சிறுவர்கள் இருவர் மரணம்

பரமக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பள்ளிச் சிறுவர்கள் இருவர் மரணம்
Updated on
1 min read

பரமக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பள்ளிச்சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர். இச்சிறுவர்களின் தாய் படுகாயமடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் சென்னையில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ரேகா(40), மகன்கள் ஜெகதீஸ்வரன்(10), விகாஷ்(8) ஆகியோர் பொதுவக்குடி கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் 30-ம் தேதி இரவு ரேகா மற்றும் இரு மகன்களும் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கான்க்ரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்துவந்த பரமக்குடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவர்கள் ஜெகதீஸ்வரன், விகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. ரேகாவை படுகாயங்களுடன் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இறந்த சிறுவன் ஜெகதீஸ்வன் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பும், விகாஷ் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். அதனையடுத்து பரமக்குடி வட்டாட்சியர் விஜயகுமார், பொதுவக்குடி கிராமம் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்தார். பரமக்குடி எம்எல்ஏ என்.சதன் பிரபாகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று ரேகாவை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in