Last Updated : 31 Jan, 2020 12:08 PM

 

Published : 31 Jan 2020 12:08 PM
Last Updated : 31 Jan 2020 12:08 PM

ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் பரபரப்பு: சக பாதுகாப்பு வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவரிடம் விசாரணை

ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் பாதுகாப்பு வீரர் ஒருவரை இன்னொரு வீரரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான கனரக வாகனத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், கிரிஜேஷ் குமார் என்ற வீரர் நேற்று இரவு பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இன்று (ஜன.31) அதிகாலையில் ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பணி மாறுதலுக்கு வந்த மற்றொரு வீரர் நிலம் சின்ஹா என்பவர், தூங்கிக் கொண்டிருந்த கிரிஜேஷ் குமாரைத் துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நிலம் சின்ஹா

இந்த துப்பாக்கிச் சூட்டில் கிரிஜேஷ் குமார் மீது 6 குண்டுகள் பாய்ந்தன. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த தொழிலாளர்கள், கொலையாளி நிலம் சின்ஹாவைப் பிடித்துக் கட்டிவைத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கிரிஜேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிலம் சின்ஹாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x