Published : 29 Jan 2020 07:57 PM
Last Updated : 29 Jan 2020 07:57 PM

சென்னையில் 2 ஆண்டுகளாக சிறார் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் கைது: ஐபி முகவரி மூலம் போலீஸ் நடவடிக்கை

சென்னையில் 2 ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்ததாக அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞரை ஐபி முகவரியை வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆபாச வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பது, அதனைப் பரப்புவது, அதையொட்டி காணொலிகள் தயாரிப்பது என சமூக வலைதளம் மோசமான நிலையை நோக்கிச் செல்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என அரசுக்குப் பல கோரிக்கைகள் வந்தன.

ஆபாச வலைதளங்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை உலகிலேயே இந்தியர்கள் அதிகம் என்கிற ஆய்வும், தமிழகம் அதில் முன்னேறிய இடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. இதையடுத்து மத்திய அரசு 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை மத்திய அரசு முடக்கியது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றமாகும்.

ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்சினையாக மாறி வந்தது.

இவ்வாறு நடந்தவர்களின் பெரிய பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப அது தமிழக போலீஸாருக்கும் வந்தது. ஐபி அட்ரஸை வைத்து அதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

இதில் ஐபி அட்ரஸ் மூலம் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அம்பத்தூரைச் சேர்ந்த கம்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ஒருவரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறார் ஆபாச வலைதளங்களை பார்ப்பவர்கள் குறித்து ஐபி அட்ரஸ்களை வைத்து போலீஸார் சோதனையிட்டு வந்தபோது அம்பத்தூர் கல்லிக்குப்பம், விபிசி நகர், முதல் பிரதான சாலையில் வசிக்கும் ஹரீஷ்(24) என்கிற இளைஞர் கடந்த 2018- ஆகஸ்டு மாதம்முதல் தற்போது கைது செய்யப்படும்வரை சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் அனுப்பிய ஐபி அட்ரஸ் அடிப்படையில் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஹரீஷை இன்று மதியம் கைது செய்தனர். ஹரீஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றுள்ளார். அவர்மீது ஐடி ஆக்ட் 67(பி), 14(1) போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x