Last Updated : 27 Jan, 2020 12:31 PM

 

Published : 27 Jan 2020 12:31 PM
Last Updated : 27 Jan 2020 12:31 PM

திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை: பாஜகவினர் சாலை மறியல்

திருச்சியில் பாஜக பிரமுகரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருசக்கர நுழைவு பகுதியில் வாகனத்திற்கு சீட்டு வழங்கும் வேலை செய்து வந்தவர், வரகனேரி பகுதியைச் சேர்ந்த விஜயரகு (40). இவர் பாரதிய ஜனதா கட்சியில் பாலக்கரை பகுதி நிர்வாகியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று (ஜன.27) காலை மிட்டாய் பாபு என்பவர் அவரை வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயரகுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயரகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய மிட்டாய் பாபுவையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, விஜயரகு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்சி அரசு மருத்துவமனை முன்பு பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொலையாளியை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக விஜயரகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், தேடப்பட்டு வரும் மிட்டாய் பாபு மீது ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x